தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதி மே 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.
இதனால், வெள்ளியங்கிரி மலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்து, ஏழு மலைகளை ஏறி சிவபெருமானை தரிசித்துச் சென்றனர்.
மே 31ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி மலை ஏற வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் அந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதால், நேற்று மாலையே, மலைக்குச் செல்வதற்கான படியில் உள்ள இரும்புக் கதவு பூட்டப்பட்டது. வனத்துறை மற்றும் கோயில் சார்பில், மலையில் ஏற அனுமதியில்லை என்ற அறிவிப்புப் பலகையும், கதவருகே வைக்கப்பட்டுள்ளது.
எனவே, வெள்ளியங்கிரி மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்காக என்று, பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.