பெரம்பலூர் அருகே 6 சவரன் நகைகளை திருடிக்கொண்டு வயதான தம்பதியினரின் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது இன்று தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (75), இவரது மனைவி மாக்காயி (70). இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்ட நிலையில், மாணிக்கமும், மாக்காயும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இருவரும் வீட்டில் தூங்கினர். செவ்வாய்க்கிழமை காலை இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வி. களத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் மேற்கண்ட இருவரின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வி.களத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உடலில் மிளகாய் பொடி இருப்பதாகவும் 6 சவரன் நகைகளை திருடிக்கொண்டு சென்றிருப்பதும் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரண நடத்திய பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஷ்யாமளா தேவி, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பேனா சின்னம் கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம்!
இந்த வயதான தம்பதியினர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொண்டப்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.