வேங்கைவயலில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்காக ரூ.9 லட்சம் நிதி வழங்குவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீா் வழங்கும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிச. 26ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதையும் படிக்க- ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தொகுப்பூதிய உயர்வு: ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
இதனிடையே, வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதியில் இருந்து தெற்குப் பகுதியில் புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான இடம் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வேங்கைவயல் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்காக தனது எம்பி நிதியில் இருந்து ரூ.9 லட்சம் நிதி வழங்குவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.