அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை(பிப்.28) “ஏற்றமிகு 7 திட்டங்களின்” கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணி நியமன ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம், சிற்பி திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், புதுமைப்பெண் . உயர் கல்வி உறுதித் திட்டம், விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட 1.50 இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், கள ஆய்வில் முதல்வர் திட்டம், தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டம், ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், அயலகத் தமிழர்கள் நல வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு ஒவ்வொரு திட்டமும் பொதுமக்கள், விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் விரிவாக்கமாக நாளை(பிப்.28) அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக முதல்வர் தலைமையில் சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத் தொடக்க விழா, திருநங்கைகளக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, நகராட்சி நிர்வாகத் துறை மூலம் தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட விழா மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.