பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்யக் கோரிய டெண்டர் கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு சென்னையின் 2-வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ஆம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்யக் கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரியது.
முதலாவதாக நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசம் கடந்த 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவசாகம் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது.
விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை, விமான நிலைய மேம்பாடு தொடர்பாக விரிவான திட்டம்(மாஸ்டர் பிளான்), திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியானது.
கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆம் ஆண்டு முதல் 2069- 70 ஆண்டுகள் வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்து, அது தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.