காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டிலும் தனது வருகையைப் பதிவு செய்தார். அமைச்சருடன் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமு அன்பரசன், மக்களவை உறுப்பினர் க. செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
அண்ணா நினைவு இல்லத்தில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேனா சிலை ஒன்றை பரிசாக வழங்கினார், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் வெள்ளி வாள் ஒன்றை பரிசாக வழங்கினார்,
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவ சண்முகம், பயிற்சி ஆட்சியர் அர்பித் ஜெயின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.