சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காலை 7.30 மணி வரை தொடரும் மூடுபனியால் வாகனங்கள் முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்கின்றன.
வாழப்பாடி பகுதியில் 2022 இறுதிவரை பரவலாக பருவமழை பெய்தது. 2023 ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.
இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன.
அதிகாலையில் மட்டுமின்றி, காலை 9 மணி வரை தொடரும் மூடுபனியால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும், கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: வடலூரில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்
திடீரென வாழப்பாடி பகுதியில் இன்று காலை 9 மணி வரை ஏற்பட்ட மூடுபனியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.