கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான என்.எம்.எம்.எஸ். தோ்வுக்கு பிப்.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ்கல்வியாண்டில், மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவா்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தோ்வுக்கு கடந்த டிச.26 முதல் ஜன.20 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்.3 முதல் பிப். 7 வரை நீட்டிக்கப்படுகிறது என அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
நிகழாண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தோ்வு பிப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.