சென்னை, நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் மரியாதை செலுத்தினார்.
திரையிசைப் பாடகி வாணி ஜெயராம் தனியாக தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது வீட்டுப் பணியாளர் மலர்க்கொடி இன்று காலை 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியும் திறக்காததால் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரிக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் எடுத்து வந்த வீட்டு சாவி மூலம் கதவு திறக்கப்பட்டு, வீட்டுக்குள் சென்றனர். வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில், ரத்தக் காயங்களுடன் வாணி ஜெயராம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். உடற்கூறாய்வு நிறைவடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்து வாணி ஜெயராமின் உடல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரது உடல் நாளை சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.