கம்பம்: சர்வதேச சுற்றுலா தலமான தேக்கடி ஏரிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், சாலையின் குறுக்கே திடீரென யானைக்கூட்டம் கடந்து சென்றதால் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மாவட்டம் அருகே அமைந்துள்ளது தேக்கடி ஏரி. இது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இங்கு படகு சவாரி செய்யவும், ஏரியில் படகு சவாரியின் போது காணப்படும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் விடியோ, சுயபடங்கள் எடுத்து மகிழ்வர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தேக்கடிக்கு ஆனவாச்சல் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து பெரியாறு புலிகள் காப்பகத்திற்குச் சொந்தமான சிறிய பேருந்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது தமிழக பொதுப்பணித்துறை பணியாளர்கள் குடியிருப்பு அருகே செல்லும் போது திடீரென யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியிலிருந்து சாலையை கடந்து தேக்கடி ஏரிக்கு சென்றது. இதனால் பேருந்து ஓட்டுநர் நிறுத்தவே அதிலிருந்து இறங்கிய பயணிகள் கைபேசியில் விடியோ எடுக்கத் தொடங்கினர். அப்போது யானைகளின் பின்னே மற்றொரு யானை பின்தொடர்ந்து வந்து தேக்கடி ஏரிக்கு சென்றது. யானைக்கூட்டத்தை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் கூறும்போது, விருந்தினர்கள் வந்ததால் தேக்கடியில் மதிய நேர படகு சவாரிக்கு சென்றோம். கேரள வனத்துறைக்கு சொந்தமான பேருந்தில் செல்லும்போது யானைகள் சாலையை கடந்து செல்லும் போது பார்த்தோம்.
படகு சவாரியின் போது வன விலங்குகளை பார்க்க குடும்பத்துடன் சுற்றுலா சென்றோம். யானைகளை அருகிலேயே பார்த்ததால் சந்தோஷமடைந்தனர் என்றார்.