இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தடை ஏதும் இதுவரை விதிக்காததை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் தரப்பு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் போட்டியிட ஏதுவாக சின்னத்தை ஒதுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
படிக்க | இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்: அண்ணாமலை பேட்டி
பொதுக்குழு முடிவை ஏற்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று பதில் அளித்திருந்தது. அதில், இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடவுள்ளதாகத் தெரிகிறது.
இரட்டை இலை: தேர்தல் ஆணைய பதில்
தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தொடர்ந்த இந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
படிக்க | என்னவாகும் இரட்டை இலை?
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில், ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணிகள் கிடையாது. வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.
ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.