பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால், தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மாணவர்களைப் பொருத்தவரை படிப்பதற்காக வரக்கூடிய இடம்தான் பள்ளிக்கூடம். எனவே, குழந்தைகளைப் படிப்புக்கு மட்டுமே ஆசிரியர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் பயன்படுத்த வேண்டும். வேறு விதங்களில் பயன்படுத்தினால் துறை ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத் தேர்வை மாணவர்கள் பதற்றப்படாமல் அச்சமின்றி எழுத வேண்டும்.
கடைசி நேரத்தில் மட்டுமே படிப்பதைத் தவிர்த்து, இப்போதிருந்தே படித்தால் தேர்வு அச்சத்தைத் தவிர்க்கலாம் என்றார் அமைச்சர்.
ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்தால் மாணவர்களுக்கு பாதிப்பு: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என்று ஆணையத்திடம் தெரிவித்து, பணிநிரவல் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி பணியிடம் மாற்றம் செய்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர், மாணவிகள் பாதிக்கப்படுவர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெறவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதிலிருந்தே, அவர்களுக்கு தோல்விப் பயம் தொடங்கி விட்டது என்பது நன்றாக தெரிகிறது என்றார் அமைச்சர்.