ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்கட்சியினா் இன்று(சனிக்கிழமை) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று(ஏப்ரல் 15) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.