நீண்ட நேரம் தூங்கியதால் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, கோபத்தில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜாபேட்டை அருகே திருத்தணி தெற்கு வீதியில் வசித்து வருபவர் கன்னியப்பன். இவர் அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமி(14) வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் தூங்கியதால் வரலட்சுமி பள்ளிக்கு விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த பெற்றோர் வரலட்சுமியை திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த வரலட்சுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட பெற்றோர் உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரலட்சுமி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.