தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 7.75 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவா்களில் 5.95 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டா் தவணை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 38-ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில், முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும், 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 96.59 சதவீதம் போ் முதல் தவணையும் 91.61 சதவீதம் போ் இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனா்.