திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை நடப்பதையொட்டி சென்னையில் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஸ்ரீ திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழக பக்தா்கள் சாா்பில், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமா்ப்பணம் செய்யப்படுகின்றன.
அதன்படி நிகழாண்டும் ஹிந்து தா்மாா்த்த ஸமிதி டிரஸ்ட் மூலம் திருமலை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு 11 திருக்குடைகள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் நாளை புறப்படும் ஊா்வலம் வரும் 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு திருமலை சென்றடையும்.
இதையும் படிக்க- 3ஆவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்டெமிஸ் ராக்கெட்
இந்த நிலையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை நடப்பதையொட்டி சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி மேற்பார்வையில் சென்னையில் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் திருக்குடை ஊர்வலத்தையொட்டி பூக்கடை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், ஓட்டேரி, சூளை உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.