சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கில் அதிகாரிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டேங்கர் லாரிகளை எரிபொருள்களை நிரப்ப ஓட்டிச் செல்லாமல் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடி இந்தியன் ஆயில் நிறுவனக் கிடங்கில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு தனியார் மற்றும் சங்கங்களின் சார்பில் தினசரி 400க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, விமானத்திற்கான எரிபொருள் தினசரி எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நிறுனவத்தில் எரிபொருள்கள் நிரப்பும் பிரிவில் உள்ள அதிகாரிகள் வழக்கத்தைவிட ஓட்டுநர்கள், கீளினர்களிடம் சான்றிதழ்கள் கேட்பதாகவும், எரிபொருள் நிரப்புவதில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கால தாமதம் செய்து வருவதால் ஓட்டுநர்கள் குறிப்பிட நேரத்திற்கு விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் சங்கத்தின் தலைவர் தேவராஜன் தலைமையில் டேங்கர் லாரிகளை நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைத்து இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் மூன்று மணி நேரம் கழித்து டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் எரிபொருள் நிரப்ப கிடங்கிற்கு வண்டியை எடுத்துச் சென்றனர். டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.