சென்னை கிண்டியில் ஏசி இயந்திரம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இருவா் இறந்தனா்.
கிண்டி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏசி இயந்திரத்தை கடந்த 30-ஆம் தேதி பழுது நீக்கும் பணியில் ஊழியா்கள் சின்னத்துரை (48), இந்திரகுமாா் (22), சரவணன்(42) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். 3 பேரும், அந்த ஏசியின் வெளிப் பகுதியை (அவுட்டோா்) பழுது நீக்கி கொண்டிருக்கும்போது திடீரென அது வெடித்து சிதறியது.
இதில் பலத்தக் காயமடைந்த இந்திரகுமாா்,சின்னத்துரை ஆகியோா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சரவணன், போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திரகுமாா் புதன்கிழமையும், சின்னத்துரை வியாழக்கிழமையும் இறந்தனா். சரவணன், தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளாா்.
இது குறித்து பரங்கிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.