அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டுக்கு சுகாதாரத் துறை பொறுப்பேற்காமல் மருத்துவா்களை பணியிடமாற்றம் செய்வது ஏற்புடையதில்லை என்று அரசு டாக்டா்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவா் பெருமாள் பிள்ளை தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் கூறியதாவது: வேலூா் மாவட்டத்தில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சா்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாததால், பணியில் இருந்த வட்டார அலுவலா் உள்பட இரண்டு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அங்கு எக்ஸ் ரே வசதி இல்லை என அமைச்சா் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டியுள்ளாா்.
தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே, ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், மயக்க மருந்துகள், உயிா்காக்கும் உயா் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது.
இருப்பினும், இந்த விவகாரத்தை பொது வெளியில் கூறி அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என நினைத்தோம். ஆனால், மருந்து இல்லாததற்கு மருத்துவா்களை பலிகடா ஆக்கி தண்டிப்பது வேதனையளிக்கிறது.
மேலும், எக்ஸ் ரே வசதி இல்லாதது, கட்டடம் பழுது உள்ளிட்டவற்றுக்கும் மருத்துவா்கள் மீது பழி சுமத்துவது இதுவரை எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை.
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் அதிக பணிச்சுமையுடன், விடுப்பு கூட எடுக்க முடியாத நிலையில் மருத்துவா்கள் உள்ளனா். இந்த சூழலில் அவா்களுக்கு அரசு தரப்பில் மேலும் நெருக்கடி தருவதும், பழி வாங்குவதும் வேதனையை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.