திருப்பூர் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக் குழுவை சமூக நல பாதுகாப்புத்துறை அமைத்துள்ளது.
சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளது. குழு விசாரணை மேற்கொண்டு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் வேல் வைத்துப் பூஜை
திருமுருகன்பூண்டியில் செயல்படும் தனியார் காப்பகத்தின் உணவகத்தில் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை எடுத்த திருமுருகன்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 15 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இதில் ஒரு சிறுவன் ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் சென்று விட்டதால் மற்ற 14 பேரும் காப்பகத்திலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சிறுவர்கள் அனைவரும் நேற்று இரவு ரசமும், லட்டும் சாப்பிட்டுள்ளார்கள். இதையடுத்து இரவு முதலே சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறுவர்கள் அனைவரும் அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மாதேஷ்(16), பாபு உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
மேலும் தரனீஸ் 12, கௌதம் 18, சபரீஷ் 10, சதீஷ் 9, குணா 8, ஹர்ஷத் 9, ரித்திஷ் 8, ஸ்ரீகாந்த் 13, மணிகண்டன் 17 ஆகிய 9 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.