திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஹிந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகையை மறைத்தபடி, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த பலகை வைக்கப்பட்டது. தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக சகயோக் என்று எழுதப்பட்டிருந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்று கண்டித்திருந்தனர்.
மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ரயில் நிலையத்தில் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். கூடுதலாக வேண்டுமானால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை வைத்துக் கொள்ளலாம். ஆனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற ஹிந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது புரியாது. இது புதிய வகை ஹந்தித் திணிப்பாகும் என்று பாமக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் இன்று காலை இந்த ஹிந்தி திணிப்பு தகவல் பலகையை அகற்றியுள்ளனர்.