மதுரை மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு கருப்பு கோயிலுக்கு முன்பாக உள்ள பரம்பு கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மும்மாரி மழை பொழியவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேலவளவு சோமகிரி மழை அடிவாரத்தில் உள்ள பரம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று அதிகாலையில் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழா குறித்து மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேலூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்தனர். கிராமத்தினர் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து கரையில் வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்தோர் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்கத் துவங்கினர்.
இதில் கட்லா, ரோகு, விரால், கெளுத்தி, ஜிலேபி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிடிபட்ட மீன்களை அவரவர் வீட்டிற்கு எடுத்துச்சென்று சமைத்து குடும்பத்துடன் உட்கொள்வதை இந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.