மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
நீர் வரத்து குறைந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 118.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.82 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,058 கன அடியிலிருந்து வினாடிக்கு 5166 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 90.03 டி.எம்.சியாக உள்ளது.