மத்திய அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்றுசேரும் வகையில் செயல்பட்டு வருவதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
சாலை கட்டுமானத்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை பெங்களூர் விரைவு சாலை இரு முக்கிய நகரங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தும். சென்னை துறைமுகம் மதுரவாயல் 4 வழி உயர்த்தப்பட்ட சாலை மாநகர நெரிசலைக் குறைக்கும். 5 ரயில்வே நிலையங்கள் மேம்பாடு செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை அடுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை - தேனி இடையேயான அகல ரயில் பாதை திட்டம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். பிரதமர் ஆவாஷ் யோஜனா திட்டத்தின்படி வீடுகள் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். மத்திய அரசால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தேசியக் கல்விக் கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்க முடியும். மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படும். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் எனத் தெரிவித்தார்.