நாட்றம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியாகின. மர்ம விலங்கைப் பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த திருப்பதியின் மனைவி அலமேலு(70). கணவர் இறந்த நிலையில் இவர் தனியாக ஆடு மேய்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக சுமார் ஒன்பது ஆடுகள் உள்ளன. வழக்கம்போல் நேற்று ஆடுகள் அனைத்தையும் மேய்ச்சலுக்கு கொண்டுசென்று மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய நிலையில், வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் 9 ஆடுகளையும் கட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் காலை வந்து பார்க்கும்போது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒன்பது ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தன. எந்த விலங்கு கடித்திருக்கும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் மர்ம விலங்கை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
9 ஆடுகளை மட்டும் நம்பி வாழ்வாதாரம் நடத்திவந்த அலமேலு, தனக்கு ஏதாவது மாவட்ட நிர்வாகம் நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.