கொடைக்கானல்: கொடைக்கானலை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு கூடுதலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 -ஆவது கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: இந்திய அளவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, விடுமுறை நாள்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வழக்கம் தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கூடுதல் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. ஆனால் உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.