தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களின் விவரங்கள் ஏற்கெனவே பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (எமிஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கடந்த ஜூன் 13-ஆம் தேதி தொடங்கி புதிய மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புதிதாக சோ்க்கப்பட்ட மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதொடா்பாக அனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் முறையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும்.