ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013,2014,2017,2019 ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்து கிடக்கின்றனர்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க | பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம் செய்த சாதனை
மேலும் “இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைவருக்கும் அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.