புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி (ஜூலை 29- ஆக. 7) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிக்கும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாசிப்பு நிகழ்ச்சி பகல் 12.30 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்து கொண்டார்.
இதையும் படிக்க | இளையராஜா மீது ஏன் இவ்வளவு வன்மம் ?
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே. மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, எழுத்தாளர் ந. முத்துநிலவன், அ. மணவாளன், ம. வீரமுத்து, எஸ்.டி. பாலகிருஷ்ணன், ஆர். ராஜ்குமார், அறிவியல் இயக்க மாவட்டச் செயல.ர் மு. முத்துக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேபோல, சுமார் 500 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் 200 அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அமர்ந்து வாசித்தனர்.
இதேபோல அரசு அலுவலகங்களிலும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், பெரும்பாலும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட 'தமிழினி' புலனக் குழுவின் சார்பிலும் புத்தக வாசிப்பு நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் சுமார் நூறுபேர் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இந்த வாசிப்பில் பங்கேற்றனர். இந்த வாசிப்பு ஜூம் இணையவழியில் ஒளிபரப்பானது.