அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11 ம் தேதி நடக்கிறது. இதற்கு, காவல்துறை பாதுகாப்பு அளிக்ககோரி முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பென்ஜமின் ஆகியோர், டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை முழுமையாக பாதுகாப்பு வழங்கவேண்டும். சமூக விரோதிகள் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பொதுக்குழுவை தடுக்க ஓ.பி.எஸ்.தரப்பினர் சமூக விரோதிகளை தூண்டி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூன் 23-ம் தேதி போல் அல்லாமல், ஜூலை 11 -ம் தேதி காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நேரடியாக சந்தித்து மனு அளித்தோம். டி.ஜி.பி. பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
கேள்வி : ஓ.பி.எஸ் கட்சி விதிகளை மீறி நடப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
பதில்: கட்சி விதிகளை மீறி செயல்படுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டனுக்கு ஒரு விதி நிர்வாகிகளுக்கு ஒரு விதி என தனித்தனியாக எதுவும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் அதிமுக தலைமை முடிவு செய்யும்.
கரோனா விதிமுறைகளின் படி, பொதுக்குழு நடைபெறும். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.