துறையூர்: துறையூர் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு புதுதில்லியிலுள்ள என்சிசி (தேசிய மாணவர் படை) தலைமையகம் கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து வழங்கி சிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் சி. ராஜேந்திரன். இவர் துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 34 ஆண்டுகளாக பணியாற்றி 2020 இல் ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியின் போது பள்ளியில் கூடுதலாக தேசிய மாணவர் படை அலுவலராக செயல்பட்டார். மூன்றாம் (நிலை) அலுவலராக தொடங்கி பணி ஓய்வு பெறும்போது தலைமை அலுவலராக என்சிசியில் தொடர்ந்து 33 ஆண்டுகள் பணி செய்தார்.
என்சிசி மாணவர்களை ரத்த தானம், சுற்றுப்புறச் சூழல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக பணியில் ஈடுபடுத்தினார்.
கௌரவ லெப்டினன்ட் அந்தஸ்து பெற்ற ஓய்வு பெற்று என்சிசி அலுவலர் சி. ராஜேந்திரன்.
தமிழகத்தில் நடந்த என்சிசி முகாம்கள் மட்டுமின்றி அம்பாலா, பாட்னா, டோராடூன், கோலாப்பூர் உள்ளிட்ட இந்திய அளவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை முகாம்களுக்கு பொறுப்பாளராக சென்றார்.
என்சிசியில் அவரது பங்களிப்பை கவனத்தில் கொண்டு அவருக்கு கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து வழங்க 2-ஆவது கவச அணி (தமிழ்நாடு) திருச்சி என்சிசி படைப்பிரிவு அளித்த பரிந்துரையை சென்னையில் உள்ள என்சிசி அலுவலகம் ஏற்று புதுதில்லி தலைமை அலுவலகத்துக்கு அவரது பெயரைப் பரிந்துரைத்து.
இதையும் படிக்க | சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்!
இந்த நிலையில் நிகழாண்டில் புதுதில்லி என்சிசி தலைமை அலுவலகம் இந்திய அளவில் 5 பேருக்கு கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து வழங்கியது. அதில், தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ராஜேந்திரனுக்கும் கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து கிடைத்தது. அதற்காக அரசாணை முறையாக வெளியிட்டப்பிறகு கெளரவ லெப்டினன்ட் சான்று திருச்சி என்சிசி கட்டளை அலுவலகத்தில் கட்டளை அதிகாரி கர்னல் ஹரிஷ்நாடார் வழங்கி பாராட்டினார்.
கெளரவ பதவி பெற்ற ஒருவர் ராணுவம் உள்ளிட்ட முக்கிய அரசு விழாக்களில் சீருடையுடன் சென்று பார்வையாளராக பங்கேற்கும் கெளரவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.