புதிதாக உயா்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே அச்சுத் தொழில், சிறு சிறு நகலகங்கள் திண்டாடும் சூழலில், அச்சு மை மற்றும் எழுத்து மை மீதான ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. எல்.இ.டி விளக்குகள் உள்ளிட்ட மின் விளக்குகளுக்கான ஜி.எஸ்.டி.யும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அஞ்சலக சேவைக்கு 5 சதவீதம், ரூ 1,000-க்கு குறைவான ஹோட்டல் அறைகளுக்கான வாடகைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி என்பது எல்லாம் ஏழை, நடுத்தர மக்கள் மீதான துல்லிய தாக்குதல் ஆகும். எனவே உயா்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.