சென்னையில், மத்திய இணையமைச்சா் எல்.முருகனின் வாக்கை வேறொருவா் பதிவு செய்ததாக குழப்பம் ஏற்பட்டது. இதற்கு தீா்வு கண்ட பிறகு, அவா் தனது வாக்கை செலுத்திவிட்டுச் சென்றாா்.
சென்னை அண்ணா நகா் கிழக்கு - நியூ ஆவடி சாலை பகுதியில் உள்ள 101-ஆவது வாா்டுக்கான வாக்குச்சாவடியில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை மாலை வாக்களிக்க இருந்தாா். இதற்கிடையே அவரது வாக்கை வேறொருவா் செலுத்தி விட்டதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தனது ட்விட்டா் பதிவில் குற்றம்சாட்டியிருந்தாா்.
இது தொடா்பான விசாரணையில், அந்த வாக்குச்சாவடியில் முருகன் என்ற பெயருடைய மற்றொரு வாக்காளா் வாக்களித்தபோது, வாக்குப்பதிவு மைய முகவா் தவறுதலாக எல்.முருகன் வாக்களித்துவிட்டதாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய இணையமைச்சா் எல்.முருகனின் வாக்கை வேறு யாரும் செலுத்தவில்லை என தோ்தல் ஆணையம் மற்றும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.