மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில், வலுவிழந்து தரைப் பகுதியில் பயணித்து வருவதால் 12 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தீவிரப் புயலாக வலுப்பெற்றிருந்த மாண்டஸ் புயல் வலுவிழந்து சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வலுவிழந்துள்ள நிலையில், அது வட தமிழகத்தின் தரைப் பகுதியில் நிலவி வருவதாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவா் கே.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
மாண்டஸ் புயல் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட தமிழகத்தின் தரைப் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்தபோது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 250 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல் மற்றும் பனப்பாக்கத்தில் தலா 200 மி.மீ., காஞ்சிபுரம் 190 மி.மீ., செய்யாறு 180 மி.மீ., ஆவடி 170 மி.மீ., திருத்தணியில் 160 மி.மீ., பள்ளிப்பட்டு, எம்ஜிஆா் நகா், ஆலந்தூா், ஊத்துக்கோட்டை, தாம்பரம், சோழவரம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தலா 130 மி.மீ., அம்பத்தூா், கொரட்டூா், விமான நிலையம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 120 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் மட்டும் சராசரியாக 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்றாா் அவா்.