தமிழக தகவல் ஆணையா்கள் 4 பேரின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. அவா்கள் நான்கு பேரும் தங்களது பதவிக் காலத்தை கடந்த 7-ஆம் தேதி நிறைவு செய்தனா்.
ஏற்கெனவே, தமிழ்நாடு தகவல் ஆணைய தலைமை ஆணையா் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், மேலும் நான்கு தகவல் ஆணையா்கள் தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளனா். தகவல் ஆணையா்கள் பதவிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களைத் தோ்ந்தெடுக்க உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஏ.அக்பா் அலி தலைமையில் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தகுதியான விண்ணப்பங்களை அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோரைக் கொண்ட குழுவினா் தகவல் ஆணையா்கள் பதவிக்கான பெயா்களைப் பரிசீலனை செய்து ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைப்பா். அவா் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து புதிய தகவல் ஆணையா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா்.