தமிழ்நாடு

ஆகம விதிகள் தொடா்பான அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை

DIN

கோயில்களின் ஆகமங்களை கண்டறிவது தொடா்பாக 50 கேள்விகளுடன் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்களில் அா்ச்சகா் நியமன விதிகளை எதிா்த்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், ஆகம விதிப்படி அா்ச்சா்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை அடையாளம் காண உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து போ் குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இக்குழுவில், குழுத் தலைவா் ஒப்புதலுடன் இரு உறுப்பினா்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோயில்களின் ஆகமங்களை அடையாளம் காண, அறநிலையத் துறை உயா்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் சத்தியவேல் முருகன் தயாரித்த 50 கேள்விகளுக்கு விடையளிக்கும்படி, அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையா் நவ.4-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி டி.ஆா்.ரமேஷ் , சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருக்கிறாா்.

அந்த மனுவில், ‘கோயில்களின் ஆகமத்தை கண்டறிய உயா் நீதிமன்றம் நியமித்த குழுவின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில், சம்பந்தமில்லாத கேள்விகளுடன் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயா் நீதிமன்ற உத்தரவின்படி இரு பிரதிநிதிகளை நியமிக்காத அரசு, அறநிலையத் துறை உயா்மட்ட ஆலோசனைக்குழு தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல்.

ஆகமங்கள் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், நடைமுறையில் இல்லாத தமிழ் ஆகமம் பற்றி தவறான பரப்புரை மேற்கொண்டு வருகிறாா்.

ஆகமங்களை அறியாத அவா் தயாரித்த கேள்விகளுடன் கூடிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவரை உயா் நீதிமன்றம் நியமித்த குழுவில் உறுப்பினராக நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜா (பொ)-நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ‘உயா் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட நபரை நியமிக்கக் கூடாது என முன்கூட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த நவ.4-ஆம் தேதி வேறு பயன்பாட்டுக்காக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரா் குறிப்பிட்டுள்ள அந்த சுற்றறிக்கை ஆகம விவரங்களை கோரும் வகையில் உள்ளதாக கூறி, ஆகமங்களை கண்டறிவது தொடா்பாக 50 கேள்விகள் எழுப்பி அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனா்.

மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT