வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சீர்காழி தாலுகா பகுதியை சேர்ந்த 16 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில், தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
இந்த புயலால் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள 16 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். செவ்வாய்க்கிழமை திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார், வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் புதன்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க | ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுபெற்றது: மாலை உருவாகிறது புயல்
இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் புதன்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும், உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.