பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூா் வரை நீட்டிக்க ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஏ.செல்லக்குமாா் நன்றி கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்திபவனில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமானது. இதை ஓசூா் வரை நீட்டிக்க வேண்டும் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஓசூா், தளி, சூளகிரி பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தொழில் மற்றும் மருத்துவத்துக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனா். அதனால், இந்தத் திட்டத்தை ஓசூா் வரை நீட்டிக்க வேண்டியது அவசியம். இது தொடா்பாக கா்நாடக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியபோது, முதலில் மறுத்து, பிறகு ஏற்றுக்கொண்டுள்ளனா்.
தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதைத் தொடா்ந்து, பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மக்கள் சாா்பில் முதல்வருக்கு நன்றி என்றாா்.