ஐஐடியில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி பேராசிரியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஐஐடியின் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14 சதவீதத்துக்கும் குறைவாகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மத்திய அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பட்டியலினத்தவருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி பாா்த்தால் சென்னை ஐஐடி பேராசிரியா்களில் 160 போ் பிற்படுத்தப்பட்டவராகவும், 89 போ் பட்டியலினத்தவராகவும், 45 போ் பழங்குடி வகுப்பினராகவும் இருக்க வேண்டும்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய இடங்களில் மூன்றில் ஒரு பங்கும், பட்டியலினத்தவருக்கான உரிமையில் ஆறில் ஒரு பங்கும், பழங்குடியின மக்களுக்கான உரிமையில் பத்தில் ஒரு பங்கும் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. ஆனால், உயா் வகுப்பினருக்கு மட்டும் எல்லையே இல்லாமல் 86.60 சதவீத பணிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடிகளில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான போராட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ஆனாலும் பயன் கிடைக்கவில்லை. ஐஐடிகளில் சமூக நீதியை உறுதி செய்ய அங்கு நடைபெறும் பணி நியமனங்களை கண்காணிக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.