நிகழாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய துணைச் செயலா் அஜேந்தா் சிங், அனைத்து மாநில மருத்துவக் கல்வி இயக்குநா்களுக்கும், மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
நீட் தோ்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், படிப்பின் விவரம், இடஒதுக்கீடு விவரம், ஊக்கத் தொகை அளிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் பதிவேற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.