ஒடிசாவிலிருந்து முதல் ரக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி கேரளத்தில் விற்பனை செய்து வந்த நபர் வேலூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்குட்பட்ட அப்துல்லாபுரம் தெள்ளூர் சாலையில் உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான காவலர்கள் ரோந்து மேற்கொண்ட போது தெள்ளூர் கூட்டுச்சாலையில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் ராணுவ உடை அணிந்து சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த நபரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார்.
மேலும் நான் ஓர் ராணுவ வீரர் எனக் கூறியுள்ளார். காவலர்கள் ராணுவ அடையாள அட்டை கேட்டதற்கு வாக்காளர் அட்டை காண்பித்துள்ளனர். பின்னர் காவலர்கள் அவரை சோதனை செய்த போது 2 பொட்டலங்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த காவலர்கள் சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ முதல் ரக கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயண்படுத்திய KL 52 M 3469 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து. விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் கைதான நபர் கேரள மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த முகமது பஷீர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒடிசா மாநிலம் ஜான்வே பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு ஆந்திர மாநிலம், தமிழகம் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
மேலும் வழியில் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்க பகலில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு ராணுவ வீரர் போல் உடை அணிந்து கொண்டு இரவில் மட்டுமே பயணம் செய்துள்ளார்.
ஒடிசாவில் கிடைக்கும் முதல் ரக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஒடிசாவில் இருந்து வரும் வழியில் பல பகுதிகளில் டெலிவரி பாய் போல் கஞ்சாவை சப்ளை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கைதான முகமது பஷீர் மற்றும் பறிமுதல் செய்த 5 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனத்தை சேலத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (NDBS) ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைக்க உள்ளனர்.