திமுக சார்பில் டிச.16ம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டங்கள் 100 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், கட்சித் தலைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் 01-12-2022 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்’ "முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கருணாநிதியின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்ட திமுக செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.” என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 16.12.2022 (வெள்ளி) அன்று பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள்” நடைபெறும் இடங்கள், பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் தலைமைக் கழகத்தின் சார்பில் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றது.
அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 18ம் தேதி வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதேபோல் 16ம் தேதி நடைபெரும் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும், கோவையில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சேலத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவும், கம்பத்தில் திமுக பொதுச்செயலாளர் பெரியசாமியும் உரையாற்றுகின்றனர்.