சென்னை: அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள இந்த நல்ல நேரத்தில் கடமைப்பட்டிக்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி. இந்த வெற்றியை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது நடந்துள்ளது என்று கூறினார்.
மேலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.