ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காக கல்வி மற்றும் மருத்துவத்திற்காக அரசு செய்யும் செலவுகள் இலவசங்கள் ஆகாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 13) கொளத்தூர் தொகுதியில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி இலவசப் பொருள்கள் கலாசாரம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. எனவே, மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த கவமாக இருக்க வேண்டும் எனப் பேசியிருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் பிரதமரின் இலவசங்கள் குறித்த பேச்சு தொடர்பாக நான் அதிகம் பேசப் போவதில்லை. ஏனென்றால், அது அரசியலாகிவிடும் என்றார். உச்ச நீதிமன்றம் அண்மையில் இலவசங்கள் என்பது வேறு மக்களுக்கான நலத்திட்டங்கள் என்பது வேறு என கருத்துத் தெரிவித்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
இதையம் படிக்க: நொறுங்கத் தயாராக நொய்டா இரட்டைக் கோபுரங்கள்: என்ன நடக்கிறது?
அந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “ கல்வி மற்றும் மருத்துவத்திற்காக அரசு மக்களுக்காக செலவிடும் நிதியானது இலவசங்களாக இருக்க முடியாது. ஏனென்றால், கல்வி அறிவை வளப்பதற்காகவும், மருத்துவம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுவதாகும். இந்த இரண்டு துறைகளிலுமே அரசு போதுமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி மற்றும் மருத்துவம் மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படுகிறது. இவையெல்லாம் இலவசங்கள் அல்ல. இவை அனைத்தும் மக்களுக்கான நலத்திட்டங்கள். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிலர் திடீரென இலவசங்கள் வழங்கக் கூடாது என அறிவுரை வழங்கி வருகிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதைப் பற்றி நான் இன்னும் அதிகம் பேசினால் அது அரசியலாகிவிடும். அதனால் இது குறித்து அதிகம் நான் பேசவில்லை.” என்றார்.