நாட்டின் 75-வது சுதந்திர தினப் பெருவிழா நிறைவினையொட்டி சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை சுதந்திர போராட்டத் தியாகி கே.கோவிந்தசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
எல்லைப் பிரிவினையின்போது நடைபெற்ற சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்து அப்போது வெளியான புகைப்படங்கள், நாளிதல் செய்திகள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் முதன்மை அஞ்சலக தலைவா் எஸ்.பாக்கியலட்சுமி, துணை முதன்மை அஞ்சலக தலைவா் கே.பிரபு சங்கா், அஞ்சலக மக்கள் தொடா்பு அதிகாரி எம்.முனுசாமி, நித்யானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.