ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
செப். 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை நியமித்துள்ளது தேமுதிக.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு துணைச் செயலாளர் பார்த்தசாரதியும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவனும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.