கள்ளக்குறிச்சி பட்டாசுக்கடை தீ விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மாலை பட்டாசுக் கடை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 போ் உயிரிழந்ததை அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். விபத்தில் காலமானவா்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறந்தவா்கள் குடும்பத்தினா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், தீவிர சிகிச்சையில் இருப்பவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.