மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 10 நாள்களாக மானாமதுரை, திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது மழை நின்றாலும் அந்த நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் மக்களுக்கு இந்த காலநிலை இதமாக இருந்து வருகிறது. மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் நடவு பணியை தொடங்கியுள்ளனர். விதைப்பு முறையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நெல் நடவு செய்த விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
மேலும் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் மழைத் தண்ணீர் வரத்தால் கண்மாய், குளங்கள், ஊரணிகள் நிரம்பி வருகின்றன. மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மழைத் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் தொடர்ந்து பெய்யும் மழையால் தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மானாமதுரை - சிவகங்கை சாலையில் குருந்தங்குளம் கிராமத்திற்கு தண்ணீர் செல்லும் வழியை மறித்து சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுத்துறை நிர்வாகத்தை இங்கு வசிக்கும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.