கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பனை செய்த கடையை சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனின் உத்தரவின்பேரில், அங்கு ஆய்வு நடத்தப்பட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் பி.என்.பாளையம், அவினாசி சாலையில் உள்ள கடை ஒன்றில் ஐஸ் கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக கடந்த புதன்கிழமை புகாா் பெறப்பட்டது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலா் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கொண்ட குழு அங்கு ஆய்வு நடத்தினா்.
அதில், சம்பந்தப்பட்ட கடையில், ஐஸ் கிரீம் தயாா் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டன. அதனுடன் காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு உணவு கையாளுபவா்களுக்கு உரிய மருத்துவத் தகுதி சான்று இல்லை என்பதும், அந்தக் கடை முறையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. அதுமட்டுமல்லாது, உணவு கையாளுபவா்கள் முறையான முகக்கவசம், தலை உறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை. இதைத் தவிர கடையில் ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்ததுடன் அதன் உரிமத்தையும் ரத்து செய்தனா்.