திருக்குவளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திருக்கோளிலி நுண்ணூட்ட சத்து பூங்கா தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், தொடங்கப்பட்டு 30ஆண்டுகள் நிறைவுயையொட்டி, அரசுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் 16,000 சதுர அடி நிலப்பரப்பில், திருக்குவளை வட்ட அலுவலக சரகத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், பனங்குடி சி.பி.சி.எல்.நிறுவனம்,நாகை ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி,ஈசனூர் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோரின் நிதி பங்களிப்போடு நுண்ணூட்ட சத்து பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.
இதில் ஊட்டச்சத்து , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த நெல்லி, மாதுளை, எலுமிச்சை, சீத்தாப்பழம், கொடுக்காபுளி,கொய்யா, சப்போட்டா, நார்த்தை உள்ளிட்ட மரக்கன்றுகள் சிறு குழந்தைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர்களுக்கு பயனளிக்கும் வகையில், இயற்கை உரமிட்டு நடவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க | குடிப்பழக்கத்தால் விபரீதம்: சங்ககிரி அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
இந்நிகழ்வினை நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம் கோட்டாட்சியர் து.துரைராஜ், திருக்குவளை வட்டாட்சியர் கு.சிவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இரா.திலகா, திருக்குவளை ஊராட்சிமன்ற தலைவர் இல.பழனியப்பன், வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம்.கலைமணி, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வர் எம். துரைராசன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.சித்ரா, தனி வட்டாட்சியர் கே. கார்த்திகேயன்,மண்டல துணை வட்டாட்சியர் வடிவழகன், தோட்டக்கலை அலுவலர் ரெ.ஜெயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.